ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ‘ஜெயில்’. இப்படத்தின் ‘காத்தோடு காத்தானேன்’ பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
வெயில், அங்காடி தெரு, காவிய தலைவன் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் G.வசந்தபாலன். இவர் தற்போது இயக்கியுள்ள படம் ஜெயில். ஜி.வி.பிரகாஷ் குமார், அபர்ணதி, ராதிகா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு கதையின் நாயகனான ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசை என்றாலே பாடல்கள் இனிமையாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் ஜெயில் படத்தின் ‘ காத்தோடு காத்தானேன்’ பாடல் கேட்போரை மெல்லிசை தாலாட்டில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. இப்பாடலை தனுஷ் மற்றும் அதிதி ராவ் பாடியுள்ளனர்.
தனுஷின் இனிமையான குரலும், அதிதி ராவின் மென்மையான குரலும் இப்பாடலுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் உள்ளது. இப்பாடல் வெளியாகி ஒரு நாள் கூட ஆகாத நிலையில் Youtube-ல் #1 ட்ரெண்டில் வந்துவிட்டது . இது இப்பாடலின் வெற்றியை உறுதி செய்துள்ளது. கபிலனின் காதல் பொங்கும் வரிகள் இப்பாடலை கேட்போரின் மனதை உருக்கும் வகையில் உள்ளது. இப்பாடலின் எதிரொலியாக ஜெயில் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.