Specials Stories

சதுரங்கத்தில் உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்திய தமிழக சிறுவன் பிரக்ஞானந்தா!

Praggnanandhaa

ஒரு தலை சிறந்த வீரர் போட்டியில் வெற்றி பெறுவது சாதாரணமான நிகழ்வு. அந்த இடத்தை தக்க வைப்பதற்காக அவர் தொடர்ந்து வெற்றி பெற்றே தீர வேண்டும். ஆனால் அதே தலை சிறந்த ஒரு வீரர் போட்டியில் வீழும் போது பலரையும் ஆச்சரியப்படுத்தும் நிகழ்வாகவும், வரலாறாகவும் அந்த போட்டி மாறுகிறது. வரலாற்றில் ஒரு முக்கியமான பெயராக வெற்றி பெற்ற போட்டியாளரின் பெயர் இடம்பெறும்.

அப்படியாக சமீபத்தில் நடைபெற்ற செஸ் போட்டியில் உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தி 16 வயது தமிழக சிறுவன் பிரக்ஞானந்தா வெற்றி பெற்ற நிகழ்வு தற்போது வரலாறாக மாறியுள்ளது.

சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கு வரலாறு படைப்பது என்பது ஒரு புதிய விஷயமல்ல. சிறு வயதில் அக்கா செஸ் விளையாட்டு பயிற்சிக்கு செல்வதை பார்த்து இவருக்கும் ஆர்வம் உண்டாகி செஸ் பயிற்சிக்கு சென்றுள்ளார். தன்னுடைய 5 வயது முதல் செஸ் போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்து சிறப்பாக விளையாடத் தொடங்கினார்.

Image

இடைவிடாத தொடர் ஈடுபாடு காரணமாக தனது 7வது வயதில், 8 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு அந்த பட்டத்தை வென்றார். அடுத்தபடியாக தனது 10வது வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்று உலகம் முழுக்க பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இப்படி பல்வேறு பட்டங்களை வென்று சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்கு இப்போது கிடைத்துள்ள வெற்றி என்பது கூடுதலாக அவரது கிரீடத்தில் பதிக்கப்பட்ட ஒரு வைரக்கல் ஆகும்.

ஆன்லைனில் நடைபெற்று வரும் ‘Airthings Masters rapid online chess tournament 2022’-ல் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 16 வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தாவும் ஒருவர்.

இதுவரை இந்த தொடரில் பிரக்ஞானந்தா விளையாடிய மொத்தம் 7 சுற்றுகளில் 1 வெற்றி, 4 தோல்விகள் மற்றும் 2 சமன். இறுதியாக விளையாடிய 3 போட்டிகளிலும் தொடர் தோல்வி.

இந்த நிலையில் தான் தனது 8வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த 31 வயது மிக்க மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தா. தொடர் தோல்வி மற்றும் உலகின் நம்பர் 1 வீரருடன் மோதல் உள்ளிட்ட காரணங்களால் கார்ல்சனே இந்த போட்டியில் வெற்றிபெறுவார் என அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த சமயத்தில் தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

கார்ல்சனுக்கு எதிராக கறுப்பு நிற காய்களுடன் விளையாடத் தொடங்கிய பிரக்ஞானந்தா, தனது திறமையான மற்றும் நிதானமான ஆட்டத்தால் 39ஆவது நகர்த்தலில் கார்ல்சனை தோற்கடித்து வெற்றியை கைப்பற்றினார். இது உலக அரங்கில் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Image

பெரும்பாலும் வெள்ளை நிற காய்களுடன் முதலில் ஆட்டத்தை தொடங்குபவர்களுக்கே வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும் நிலையில் பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றி அனைத்து போட்டியாளர்களுக்கும் புது உத்வேகத்தை அளித்துள்ளது.

‘Airthings Masters rapid online chess tournament 2022’-ல் இதுவரையில் போட்டியாளர்களின் வெற்றி, தோல்வி, சமன் உள்ளிட்ட மதிப்பெண்களை வைத்து பார்க்கும் போது புள்ளிகள் அட்டவணைப்படி 13 புள்ளிகளுடன் மேக்னஸ் கார்ல்சன் 5வது இடத்திலும், 8 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா 14வது இடத்திலும் உள்ளனர்.

அடுத்தடுத்த சுற்றுகளில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால் மட்டுமே இந்த போட்டியில் நிலைத்திருக்க முடியும். இருப்பினும் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து பெற்ற இந்த வெற்றி ஒரு மாபெரும் சாதனையாகும். உலகம் முழுக்க உள்ள தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் பலரும் பிரக்ஞானந்தாவிற்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Article By MaNo