Cinema News Specials Stories

சூப்பர் ஸ்டார் ரஜினியை கௌரப்படுத்திய விருது !!!

இந்திய திரையுலகில் வாழ்நாள் சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதாசாகெப் பால்கே விருது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.

இந்திய திரைத்துறையின் தந்தை என கருதப்படும் தாதா சாகெப்-ஐ கௌரவப்படுத்துவதற்காகவே இந்த விருதுக்கு இந்திய அரசு அவரது பெயரை சூட்டியுள்ளது. 1969-ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், படத்தொகுப்பாளர் என திரைத்துறையில் சிறப்பாக சேவையாற்றிய பலருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 1969-ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை தேவிகா ராணிக்கு தான் இந்த விருது முதன் முதலில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் இந்த விருது திரைத்துறையில் சிறப்பாக கலைப்பணி ஆற்றுவோருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. இந்த விருதை பெறுவோருக்கு இந்திய அரசு சார்பில் ருபாய் 10 லட்சம் பணப்பரிசும், ஸ்வர்ண கமல் (தங்க தாமரை) பதக்கமும், பொன்னாடையும் வழங்கப்படும். இத்தகைய மதிப்பிற்குரிய விருதை சூப்பர்ஸ்டார் பெறுவது தமிழ் திரையுலகினருக்கும், கோலிவுட் ரசிகர்களுக்கும் பெருமைக்குரிய விஷயமே.

இந்த விருது அறிவிக்கப்பட்ட சில நொடிகளில் இருந்தே, திரையுலகை சேர்ந்த பலரும் சூப்பர்ஸ்டாருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுவரை 167 படங்களில், மக்கள் கொண்டாடும் பல தத்ரூபமான கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் நடித்து இந்திய சினிமாவின் ஒரு முக்கிய அடையாளமாக திகழ்கிறார்.

இந்த விருது தனக்கு கிடைத்ததை குறித்து, ரஜினி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் “என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி பேருந்து நடத்துனராக இருந்த போது தன்னுள் இருந்த நடிப்புத் திறமையை கண்டுபிடித்து தன்னை ஊக்குவித்த பேருந்து ஓட்டுனரும், நண்பரும் ஆன ராஜ் பகதூருக்கும், தன்னை நடிகனாக்க பல தியாகங்களை புரிந்த தனது அண்ணன் சத்ய நாராயணா அவர்களுக்கும் இக்கடிதத்தில் ரஜினி தந்து மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். சூப்பர்ஸ்டார் எழுதிய கடிதத்தை கீழே காணுங்கள்.

Image

மேலும் பல வெற்றிப்படங்களில் ரஜினி நடித்து இந்திய திரையுலகிற்கு தொடர்ந்து தனது கலைப்பணியை தொடர வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசையாக உள்ளது. தாதா சாகெப் விருது பெரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.