இந்த திரைப்படம் பற்றி சொல்ல வேண்டுமானால் நடிகர் வடிவேலுவை வேறு ஒரு கோணத்தில் நமக்கு அறிமுகம் செய்த படம், பகத் பாசில் என்ற நடிகரை வில்லனாக தமிழில் ரசிக்க செய்த ஒரு திரைப்படம், உதயநிதி ஸ்டாலினுடைய திரைப்பயணத்தில் ஒரு மைல் கல், திரை அரங்குகளில் மக்கள் கொண்டாடிய மிக முக்கிய படங்களில் ஒன்று இப்படி பல விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் இவை எல்லாம் மட்டும் தான் இந்த திரைப்படமா என்றால் நிச்சயமாக இல்லை. இவற்றையெல்லாம் தாண்டி ஒரு மிகப்பெரும் விஷயம் இந்த திரைப்படத்தில் இருக்கிறது. உலக வரலாற்றில் எல்லா தலைவர்களும் கொண்டு வர நினைத்த “சமத்துவம்” “சமூக நீதி” போன்ற விஷயங்களை நெற்றி பொட்டில் அடித்தாற்போல் சொன்ன ஒரு திரைப்படம். எல்லோரும் இந்நாட்டில் மன்னர் தான். இல்லை இல்லை “மாமன்னன்” என்று சொன்ன படம்.
இந்த கட்டுரையை படிப்பவர்களும், படிக்காதவர்களும், பேசுபவர்களும், பேசாதவர்களும் நாம் அனைவரும் மாமன்னன் தான், மாமன்னர்கள் தான் அன்றும் இன்றும் என்றும்… தீண்டாமை என்பது எது? சாதியில் மட்டும் தான் தீண்டாமை இருக்கிறதா என்ன? இல்லை இல்லவே இல்லை!!!
நான் உயர்ந்தவன் – நீ தாழ்ந்தவன் , நான் அழகானவன் – நீ அகோரமானவன், நான் பணக்காரன் – நீ பணமில்லாதவன், நான் அதிகாரமுடையவன் – நீ அதிகாரமற்றவன், எனவே நாங்கள் சொல்வதை மட்டும் தான் நீ கேட்கவேண்டும் என்ற மனநிலை, இப்படி பல விஷயங்களில் ரயில் தண்டவாளத்தை போல நீடித்து கொண்டிருக்கிறது இந்த தீண்டாமை.
மாமன்னன் திரைப்படம் இதை தான் சொல்கிறது. “உண்மையை கேட்க கூடிய காதுகைளை நான் தேடிக்கொண்டிருப்பேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து உண்மைகளை தேடிக்கொண்டிருப்போம் சமத்துவமான மனிதர்களை சமுதாயாத்தை உருவாக்குவதற்காக” – மறக்கவும் தவிர்க்கவும் முடியாத சாட்டையடி வசனம். இயக்குனர் பாலு மகேந்திரா சொல்வது போல் ஒரு கலைஞனின் நுண்ணுணர்வு மிகவும் கூர்மையானது.
அந்த நுண்ணுணர்வு சிறந்த கலையாய் மாறும், மக்கள் மனதில் ஒரு விழிப்புணர்வை விதைக்கும்… அதை தான் செய்திருக்கிறது மாமன்னன் திரைப்படம். திரைப்படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் இயக்குனருக்கும் வாழ்த்துகள். மாமன்னன் திரைப்படம் 1 வருட கொண்டாட்டமாக மட்டும்மில்லாமல், பல ஆயிரம் ஆண்டுகள் கொண்டாட்டமாக இருக்க வேண்டும் மக்கள் மனதில்… புரட்சியாளர் சேகுவாரா சொல்வது போல் விதைத்து கொண்டே இரு, முளைத்தால் மரம் இல்லையேல் உரம்….