“இன்னைக்கு உங்க கணவர பாராட்ட மறந்திடாதீங்க.” ஏனென்றால் இன்றைக்கு கணவரை பாராட்டும் தினம். பாராட்டுவதென்றால் எப்படி?! “என்னங்க நீங்க எப்போவும் வரும்போது மறக்காம மாவு பாக்கெட் வாங்கிட்டு வரீங்க. அதற்கு பாராட்டுக்கள்” அப்டினு சொல்லாதீங்க.
என்னதான் அடிக்கடி சண்டை வந்தாலும், அதுக்கு முழுக்க முழுக்க நாமே காரணமா இருந்தாலும், வீண் கௌரவங்களை மூட்டை கட்டிவிட்டு நம்மிடம் அப்பாவியாக வந்து “சாரி மா, என்மேல தான் தப்பு” என்று சரண்டராகும் கணவரிடம் சில சமயங்களில் விட்டுக்கொடுத்து பாராட்டுங்கள்.
காதல் ஒருபோதும் கனவை தடுப்பதில்லை என்பார்கள். அக்காதலில் நம் கனவுகளுக்காய் உறுதுணையாக இருக்கும் கணவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. மல்டி டாஸ்கிங் பண்றதுல நம்ப மட்டும் இல்ல, ஆண்களும் கெட்டிக்காரங்க தான். ஏன்னா, ஆபீஸ் டென்ஷன்யும் நம்ப கொடுக்கற டென்ஷன்ஸயும் பொறுமையா ஹேண்டில் பண்ற கணவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே.
விட்டுக்கொடுப்பதில் மட்டும் அல்ல, நம்மை காயப்படுத்தாமல் அடிக்கடி பழைய நகைச்சுவைகளை சிதறவிட்டு சிரிப்போடு பார்த்துக்கொள்ளும் கணவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. “எப்படி பா இப்படி அழகாகிட்டே? என்று நம் பால்ய சினேகிதி கேட்கும் நேரத்தில்“ என் கணவர் என்னை நல்லா பாத்துகுறாரு னு ஜோதிகா அவர்களின் டயலாக்கை அச்சு பிசறாமல் காப்பி அடித்து சொல்லும் போதாவது யோசியுங்கள் கணவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே.
நமக்கு கோபம் வந்தா உப்புமால உப்ப அள்ளிபோட்டு அத அப்போ அப்போ வெளிபடுத்துனாலும், நம்ப மனசு கஷ்டப்படக்கூடாதுனு சாப்டு சமாளிக்கிற அந்த உயர்ந்த உள்ளங்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. இது எல்லாத்தையும் தாண்டி, நமக்காக எப்போவும் இருக்கவும், நம்பள அதிகம் காதலிக்கவும், சின்ன சின்ன செல்ல சண்டைகள் போடவும் நமக்காக நம்ப அத்த பெத்த அந்த தங்கத்த பாராட்ட வேண்டாமா? ( பாராட்டி பாராட்டு வாங்குங்கள் )