தாயின் கருவறையில் இருந்து இவருக்கு சுதந்திரம் கிடைத்த நாளுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு நம் தாய் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது.
வில்லுக்கு சொந்தக்காரர் மஹாபாரதம் அர்ஜுன், மன தில்லுக்கு சொந்தக்காரர் நம்ம அர்ஜுன் ஷார்ஜா. சிறு வயதில் இருந்து ஜாக்கி சானுக்கு பிறகு நாம் மிகவும் ரசித்த சண்டை காட்சிகள் இவர் நடித்ததே. தமிழ், கன்னடம், தெலுகு, ஹிந்தி என 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த அதிக திரைப்படங்களில் அதிரடி காட்சிகள் இடம் பெற்றதால் இவருக்கு அதிரடி மன்னன் (Action king) எனும் செல்லப் பெயர் மக்களால் சூட்டப்பட்டது.
சுதந்திர தினத்தன்று பிறந்ததாலோ என்னவோ இவருக்கு நாம் தாய் நாட்டின் மீது அதிக அளவு பற்றும் அன்பும் இருக்கிறது. தாயின் தொப்புள் கொடியில் இருந்தே தாயின் மணிக்கொடி என்று வளர்ந்து இந்தியா கொடியை தன் கையில் பதித்து கொள்ளும் அளவிற்கு நம் நாட்டின் மீது எவ்வளவு பற்று வைத்திருக்கிறார் என்று சொல்லும்போதே உடல் சிலிர்க்கிறது.
சிறு வயதில் விளையாட்டிற்கு கொள்ளையடிக்கலாம் என ஆரம்பித்து இன்று வரை கொள்ளையடித்துக் கொண்டு தான் இருக்கிறார் நம் இருதயங்களை அவர் நடிப்பினால், 1984 இல் ‘நன்றி’ எனும் திரைப்படத்தில் ஆரம்பித்து இன்றும் நம்மை தன் நடிப்பினால் பிரமிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.
மக்கள் தன்னை சந்திக்கும் போது வணக்கத்தை விட ஜெய்ஹிந்த் என்று சொல்வார்கள் என பெருமிதம் கொள்வார். ‘Gentleman’ திரைப்படத்தில் நடித்ததற்காக 1993 இல் சிறந்த நடிகர் விருது கிடைத்தது, மீண்டும் 1999 இல் சிறந்த நடிகருக்கான விருது, 2013 இல் சிறந்த வில்லனுக்கான விருது மற்றும் 2019 இல் சிறந்த துணை நடிகருக்கான விருது பெற்றார்.
இதுவரை சிறந்த நடிகராக, சிறந்த மனிதனாக, மிகச்சிறந்த குடிமகனாக இருக்கும் அர்ஜுன் ஷார்ஜா மேலும் மேலும் நம்மை ரசிக்க வைக்க வியக்க வைக்க சூரியன் FM சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.