Specials Stories

21 ஆண்டு கொண்டாட்டத்தில் “பூவெல்லாம் கேட்டுப்பார்”

poovellam kettuppar

சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த முதல் படமான பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கிய வெற்றிப்படமாக பூவெல்லாம் கேட்டுப்பார் அமைந்தது. சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் திரைப்படத்தை இயக்கிய வசந்த் அவர்கள் தான் இப்படத்தையும் இயக்கினார்.

இப்படத்தில் சூர்யா, ஜோதிகா, விஜயகுமார், நாசர், அம்பிகா, கரண், வடிவேலு, கோவை சரளா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் திரைப்படமாக அமைந்தது. இயக்குனர் வசந்த்தின் கதைக்கருவும், திரைக்கதையும் இப்படத்தை அழகாக எடுத்துச் சென்றது என்றே கூறலாம்.

மறைந்த எழுத்தாளர் மற்றும் நடிகரான கிரேஸி மோகன் அவர்கள் தான் இப்படத்திற்கு வசனங்களை எழுதியுள்ளார். வைகைப்புயல் வடிவேலுவின் காமெடி அனைத்துமே இப்படத்தின் திரைக்கதைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்தது.

விஜயகுமார் மற்றும் நாசர் இப்படத்தில் சண்டையால் பிரிந்த நண்பர்களாக நடித்திருப்பர். இப்படத்தில் விஜயகுமாரின் மகனாக சூர்யாவும், நாசரின் மகளாக ஜோதிகாவும் நடித்திருப்பர். சூர்யா மற்றும் ஜோதிகாவின் அழகான காதல், பிரிந்த இந்த இரு குடும்பங்களை எப்படி ஒன்று சேர்க்கிறது என்பதே இப்படத்தின் கதைக்கரு.

இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது. குறிப்பாக சுடிதார் அணிந்து, இரவா பகலா, செனரிட்டா போன்ற பாடல்கள் அந்த ஆண்டின் மக்கள் கொண்டாடும் பாடல்களாக அமைந்தது. இப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களையுமே கவிஞர் பழனிபாரதி தான் எழுதியுள்ளார். சூர்யா-ஜோதிகா மட்டுமின்றி யுவனின் திரையுலக வாழ்க்கையிலும் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இப்படத்தின் இயக்குனரான வசந்தின் மனைவி ரேணுகா வசந்த் அவர்களுக்கு இப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஒரு காட்சியில் சூர்யா 100 பூக்களின் பெயர்களை தொடர்ந்து உச்சரிக்கும்படி ஒரு வசனம் அமைந்திருக்கும். இந்தக் காட்சி திரையில் வரும்போது ரசிகர்கள் அனைவரும் சூர்யாவை வியந்து பார்த்தார்கள் என்றே கூறலாம்.

இப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்று வரை இப்படம் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத வெற்றி படமாகவே இருந்து வருகிறது. இப்படத்தில் சூர்யா-ஜோதிகா ஜோடி ஒரு வெற்றி ஜோடியாக அமைந்ததால் இப்படத்திற்கு பிறகு மேலும் 6 படங்களில் இவர்கள் இணைந்து நடித்தனர். நிஜ வாழ்வில் இணைந்த இந்த ஜோடி மீண்டும் திரையில் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.