காத்திருப்புக்கு மிகப் பெரிய சக்தியுண்டு. அதுவும் நம் மனதுக்கு பிடித்த பாடலை ரேடியோ பெட்டியில் காத்திருந்து கேட்கும் தருணத்தில், மனதில் சந்தோசம் ஆட்கொள்கிறது. கேட்ட பின் நம் இதழ்களில் அந்த பாடலை முணு முணுத்துக் கொண்டே இருப்போம். பிப்ரவரி 13 இன்று உலக வானொலி தினம்.
சினிமா பாடல்களையும் தாண்டி மக்களுக்கு பயனுள்ள தகவல்களை தருவது வானொலி மட்டுமே. இரண்டாம் உலகப்போர் நடந்த தருணத்தில் குறிப்பாக போர் குறித்த தகவல்களை கிராமங்களில் ஒன்றாக ஓர் இடத்தில் கூடி கேட்டுக் கொண்டிருந்த காலமும் இருந்தது.
நாட்டின் முதலாவது சுதந்திர தினமான 1947ம் ஆண்டு முதல் பங்களாதேஷ் விடுதலை, முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வரலாறு படைத்தது முதலான பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்த செய்திகளை வானொலி தான் மக்களுக்கு தெரியப்படுத்தியது. எமெர்ஜென்சி காலங்களில் வானொலியின் பயன்பாடு அதிகமாக பயன்பட்டது.
ஹரி விஸ்வநாத் இயக்கத்தில் வந்த ரேடியோ பெட்டி படத்தை பார்த்தால் நமக்கு தெரியும், ரேடியோவிற்கும் அந்த படத்தில் வரும் தாத்தாவிற்கும் இடையிலான காதல் எப்பேற்பட்டது என்று. அது நமக்கும் பொருந்தும்… பல தகவல்கள், இனிமையான பாடல்கள், நம் மனதை ஆசுவாசப்படுத்த பல நிகழ்ச்சிகள், நம் தனிமையை போக்க ஓர் நல்ல நண்பனாய் வானொலி தினம்தோறும் நம்முடன் இருக்கிறது.
காற்றில் கரைந்த இசையோடும், குரலோடும் என்றும் வானொலி மூலமாய் நாம் ஒன்றாய் பயணிப்போம் என்றும் நாமாய். அனைவருக்கும் உலக வானொலி தின வாழ்த்துக்கள்.