ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க… ஒரு நாள் முழுக்க தண்ணி இல்லாம இருக்கணும் அப்படினு சொன்னா உங்களால முடியுமா? கண்டிப்பா இருக்க முடியாது இல்ல… காலையில எழுந்ததுலிருந்து பல் துலக்குறதுக்கு, குளிக்கிறதுக்கு, குடிக்கிறதுக்கு, சமைக்குறதுக்கு இப்படி எல்லாத்துக்கும் தண்ணி தான் தேவபடுது. உண்மையா சொல்லணும்னா தண்ணி இல்லனா நம்மால மட்டும் இல்ல, இந்த உலகத்துல எந்த உயிராலும் வாழ முடியாது. செடி, கொடிகளுக்குக் கூட தண்ணி தான் ரொம்ப அவசியம்.
சரி, இப்ப நான் உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கவா ? நீங்க தினமும் தண்ணிய சரியான முறையில தான் பயன்படுத்துறீங்களா? கொஞ்சம் யோசிச்சு பதில் சொல்லுங்க… பல் துலக்கும் போது டேப்பை ஓபன்ல விடுறீங்களா? குளிக்கும்போது பக்கெட்டில தண்ணி நிரம்பி வழிந்த பிறகுதான் ஆஃப் பண்ணுறீங்களா? வண்டி கழுவும்போது பைப்ப பயன்படுத்தி அதிகமா தண்ணி வீணாக்குறீங்களா? பொது இடங்கள்ல டேப் ஓபன்ல இருந்தாலும் கண்டுக்காம போயிடுறீங்களா? பாத்திரம் கழுவும் போது டேப்பை ஃபுல்லா திறந்து விட்டு தண்ணிய ஓடவிடுறீங்களா? இந்த கேள்விகளுக்கான பதில் உங்களுக்கு மட்டும்தான் தெரியும்… எல்லா கேள்விக்கும் இல்லனு சொன்ன எனக்கு ரொம்ப சந்தோஷம்.
இவ்வளவு நேரம் நான் தண்ணி பத்தி ஏன் பேசினேன்னு நினைக்கிறீங்களா? இன்னைக்கு உலக தண்ணீர் தினம் (மார்ச் 22 ). இன்றைய காலத்தில மக்கள் தொகை அதிகரிப்பு, நகரமயமாக்கல், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால தண்ணீர் பற்றாக்குறை அதிகரிச்சுக்கிட்டு இருக்கு. பல இடங்கள்ல குடிநீர் கிடைக்கிறதே பெரிய சவாலா மாறிச்சு; இன்னும் சில கிராமங்கள்ல மக்கள் பல கிலோ மீட்டர்கள் நடந்து போய் தண்ணி எடுத்துட்டு வராங்க. நிலத்தடி நீர் குறைந்து, குளம், குட்டை, ஆறு எல்லாமே மெதுவா வறண்டு போயிட்டு இருக்கு. இந்த நிலை இப்படியே தொடர்ந்தா, நம்ம பயன்படுத்துற தண்ணீரோட அளவு இன்னும் குறையும்; ஒருநாள் தண்ணி இல்லாம போகுற நிலையும் வரலாம்.
அதனால தண்ணியை பாதுகாப்பது நம்ம ஒவ்வொருத்தருடைய கடமை. தேவையில்லாம தண்ணிய வீணாக்குவதை தவிர்க்கணும். உலக தண்ணீர் தினத்துல நான் உங்ககிட்ட கேட்டுக்குற ஒரே ஒரு விஷயம் தயவு செய்து தண்ணியை சிக்கனமா பயன்படுத்துங்க; தேவையான இடத்துல மட்டும் பயன்படுத்துங்க.

