திரைப்படம் என்பது வெறும் கதையைச் சொல்லும் ஊடகமல்ல; அது ஒரு உணர்வை கடத்தும் கருவி என்பதைத் தமிழ் சினிமாவில் உரக்கச் சொன்னவர் செல்வராகவன். ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் அவர் எடுத்துக்கொள்ளும் நீண்ட இடைவெளி, அவரது ரசிகர்களைச் சோர்வடையச் செய்வதில்லை. மாறாக, அந்த இடைவெளி ஒரு தவம் போல அவரது அடுத்த படைப்புக்கான எதிர்பார்ப்பை “கல்ட்” (Cult) அந்தஸ்திற்கு உயர்த்துகிறது.

ஒளியால் எழுதப்பட்ட உணர்வுகள்
சினிமா விமர்சகர்கள் கொண்டாடும் ‘காட்சிமொழி’ (Visual Language) என்பதற்கு செல்வா தரும் விளக்கம் அசாத்தியமானது.
மனநிலையின் பிரதிபலிப்பு:
‘மயக்கம் என்ன’ படத்தில் கார்த்திக் அழுது புலம்பும் அந்தப் பேருந்து நிலையக் காட்சி ஒரு கிளாசிக் உதாரணம். கார்த்திக்கின் பின்னால் விட்டு விட்டு எரியும் கார் விளக்கு அவனது சிதறிய மனநிலையையும், யாமினிக்கு பின்னால் நிலைத்திருக்கும் ஒளி அவளது தெளிவையும் வசனமின்றி நமக்குக் கடத்தும்.
நிறங்களின் அரசியல்:
‘புதுப்பேட்டை’ படத்தின் ‘நியோ-நாயர்’ (Neo-Noir) பாணி உலகத்தரம் வாய்ந்தது. சிவப்பு மற்றும் பச்சை நிற ஒளிகளைக் கொண்டு மனிதர்களுக்குள் இருக்கும் வன்மத்தையும், அதிகாரப் போக்கையும் அவர் காட்சிப்படுத்திய விதம், ஒரு ஓவியனின் நுணுக்கத்தைக் கொண்டது.
பெண்களின் பார்வையில் உலகம் (The Female Perspective)
செல்வராகவனின் படங்களில் நாயகிகள் வெறும் ‘பொம்மை’களாக இருப்பதில்லை. அவரது படங்களில் பெண் கதாபாத்திரங்கள் ஆழமான மனவோட்டமும், தனித்துவமான பிடிவாதமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
யாமினியும் அனிதாவும்:
7ஜி ரெயின்போ காலனி அனிதாவாகட்டும், மயக்கம் என்ன யாமினியாகட்டும்; அவர்கள் நாயகனைத் திருத்தும் ‘தாயாக’வோ அல்லது வெறும் ‘காதலியாகவோ’ மட்டும் இருப்பதில்லை. மாறாக, நாயகனின் சிதைந்த வாழ்க்கையைச் சீரமைக்கும் ஒரு பெரும் சக்தியாக (Catalyst) இருப்பார்கள்.
ஆணாதிக்கத்தைச் சாடுதல்:
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அனிதா மற்றும் லாவண்யா கதாபாத்திரங்கள் காட்டும் ஆளுமை, ஒரு ஆணாதிக்கச் சூழலில் பெண்கள் எவ்வளவு வலிமையாக காய்களை நகர்த்த முடியும் என்பதற்குச் சான்று.
விளிம்புநிலை மனிதர்களின் உளவியல்
செல்வா தனது படங்களில் நாயகர்களை மிக உயர்ந்தவர்களாகக் காட்டுவதில்லை. மாறாக, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட, மன ரீதியாகப் பாதிக்கப்பட்ட அல்லது வறுமையின் பிடியில் இருக்கும் ‘Anti-hero’க்களைத் தான் அதிகம் கொண்டாடுகிறார்.
“உயிரோடு தானிருக்கிறேன், ஆனால் பிணமாக” என்ற மனநிலையில் இருக்கும் கதாபாத்திரங்கள் செல்வாவின் ஸ்பெஷாலிட்டி.
புதுப்பேட்டை கொக்கி குமார் ஒரு ரவுடி மட்டுமல்ல; அவன் பயத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரு சாதாரண மனிதன். அவனது ஒவ்வொரு நகர்விலும் இருக்கும் பதற்றம், ஒரு கேமரா கோணத்தின் மூலமாகவே (Low-angle shots) ரசிகனுக்குக் கடத்தப்படும். சமூகத்தின் இருண்ட பக்கங்களை ரத்தமும் சதையுமாகக் காட்டுவதில் செல்வா ஒரு ‘நிழல் உலக’ ஓவியர்.
பட்ஜெட்டை வென்ற கற்பனைத் திறன் ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்டங்களுக்குப் பின்னால் இருக்கும் கோடிக்கணக்கான பணத்தை விட, செல்வாவிடம் இருந்த ‘லைட்டிங்’ நுட்பமே ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை இன்றும் பேச வைக்கிறது. அந்தப் பழைய சோழ குகைக்குள், உச்சியில் இருக்கும் ஒரு துளை வழியாக விழும் ஒற்றை வெளிச்சக்கீற்றில் கார்த்தி நிற்கும் காட்சி… அங்கே வசனங்களே vendam.
வெறும் ஒளி மற்றும் ஒலி வடிவமைப்பிலேயே ஒரு பேரரசின் மீட்சியை நம்மால் உணர முடியும். இசையும் திரையும் இணைந்த செல்வா, செல்வா – யுவன் கூட்டணி என்பது தமிழ் சினிமாவின் ஒரு பொற்காலம். யுவனின் இசை செல்வாவின் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கும்; செல்வாவின் காட்சிகள் யுவனின் இசைக்கு ஒரு அடையாளத்தைத் தரும்.

7ஜி ரெயின்போ காலனி: அனிதா சல்லடை வழியாகப் பார்க்கும் போது ஒலிக்கும் அந்த மெல்லிய இந்துஸ்தானி மெட்டு, கதிர் முன்னால் வந்ததும் ஹம்மிங்காக மாறுவது ஒரு மேஜிக்.
ஆயிரத்தில் ஒருவன் & இரண்டாம் உலகம்: ஜி.வி. பிரகாஷின் மிரட்டலான பின்னணி இசையும், ஹாரிஸ் ஜெயராஜின் வித்யாசமான இசைக்கோர்ப்புகளும் செல்வாவின் விசித்திரமான உலகங்களுக்கு வலிமை சேர்த்தன. குறிப்பாக, ஹாரிஸ் ஜெயராஜ் இருவேறு உலகங்களை ‘காதல்’ என்ற ஒற்றை உணர்வால் இசையில் பிணைத்த விதம் அற்புதம்.
சக கலைஞர்களின் பார்வையில் ‘செல்வா’: செல்வராகவனுடன் பணியாற்றிய இசையமைப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் அவரது அர்ப்பணிப்பைக் கண்டு வியப்பதுண்டு.
இசையமைப்பாளர்கள்: “செல்வாவுக்கு இசை பற்றிய ஆழமான புரிதல் உண்டு. ஒரு பாடலின் மெட்டை விட, அந்தப் பாடல் சொல்லப்போகும் கதையையே அவர் எதிர்பார்ப்பார்” என யுவன் ஷங்கர் ராஜா பல நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார். ஜி.வி. பிரகாஷும், “ஆயிரத்தில் ஒருவன் போன்ற ஒரு இசைப் பயணத்தை யாராலும் எளிதில் தந்துவிட முடியாது” என்பார்.
இயக்குநர்கள்: இன்றைய முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் போன்றோர், தங்களது சினிமா பார்வையில் செல்வராகவனின் தாக்கம் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அவர் உருவாக்கிய ‘புதுப்பேட்டை’ ஒரு பாடப்புத்தகம்” என்பது இவர்களின் பொதுவான கருத்து.
பாடகர்கள்: தனுஷ் போன்ற நடிகர்களைப் பாடகர்களாக மாற்றியதும், உணர்ச்சிகரமான பாடல்களைப் பாடும்போது நடிகர்களிடம் இருந்து ஒருவிதமான ‘நிஜத்தை’ வெளிக்கொண்டு வருவதும் இவரது பாணி.
மக்களுடன் இணைந்த ‘செல்வா மௌனம்‘: செல்வாவின் படங்கள் ஏன் மக்களுடன் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறது? ஏனெனில், அவர் மனிதனின் பலவீனங்களை (Insecurities) திரையில் காட்டத் தயங்குவதில்லை. காதல் தோல்வி, தாழ்வு மனப்பான்மை, தனிமை என ஒவ்வொரு சராசரி இளைஞனும் கடந்து வரும் வலிகளை செல்வா தன் கேமராவால் வருடிக்கொடுக்கிறார். “நாமும் இப்படித்தானே உணர்கிறோம்” என்ற நெருக்கமே அவரது படங்களை ‘கிளாசிக்’ ஆக்குகின்றன.
செல்வராகவன் வெறும் படங்களை எடுப்பதில்லை; அவர் திரையில் கவிதைகளை வடிக்கிறார். ஒரு பாடலைக் காட்சிப்படுத்துவதில் அவர் காட்டும் மெனக்கெடல் (உதாரணம்: புதுப்பேட்டை ‘நெருப்பு வாயினில்’), தமிழுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தைத் தந்தது. காட்சிமொழியை ஒரு தனி மொழியாகக் கருதினால், அதில் செல்வராகவன் ஒரு ‘பெரும்புலவர்’.
வணிக ரீதியான வெற்றிகளைத் தாண்டி, இன்னும் நூறு ஆண்டுகள் கழித்துத் தமிழ் சினிமாவை ஆராயும் எவருக்கும், செல்வா ஒரு பாடப்புத்தகமாக இருப்பார். ஒவ்வொஒரு பிரேமிலும் ஒரு வாழ்வியலை ஒளித்து வைத்திருக்கும் இந்தத் திரை ஆளுமைக்கு, இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
Article By – Rj Gowshik

