Stories Trending

மீண்டு வா .. மீண்டும் வா SPB

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து பிரார்த்தனைகளும், வேண்டுகோள்களும் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் நடிகர் சிம்பு, எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள கடிதத்தில், என்னைப்போல பாடல்கள் கேட்டு வாழும் எத்தனையோ பேருக்கு உயிர் தந்த குரல் எஸ்.பி.பி-யின் குரல் என புகழாரம் சூட்டியுள்ளார். எத்தனையோ நாட்களை கடந்து வரச்செய்த வர பாடல்கள் எஸ்.பி.பி-யுடையது எனவும் எழுதியுள்ளார்.

நம் அனைவரின் வேண்டுதல்களும் அற்புதம் நிகழ்த்தி எஸ்.பி.பி அவர்களை நம்மிடையே மீண்டும் அழைத்து வரவேண்டும் எனவும் சிம்பு கூறியுள்ளார். வேண்டுதலின் பலனாய் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு உங்களில் ஒருவனாய் அன்புடன் சிலம்பரசன், என அக்கடிதத்தில் அவர் எஸ்.பி.பி-யின் மேல் உள்ள மரியாதையுடன் எழுதியுள்ளார். இக்கடிதத்தை சிம்புவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் சிம்பு எழுதிய கடிதத்தை கீழே காணுங்கள்.

எஸ்.பி.பி-யின் உடல்நலம் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டி இன்று மாலை 6 மணி அளவில் அவருக்காக அனைவரும் தங்களது இல்லங்களில் இருந்தபடியே பிரார்த்தனை செய்யவேண்டும் என திரையுலக பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அந்த வகையில் பாடகர் ஹரிஹரன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், சின்னக் கலைவானர் விவேக், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், இயக்குனர் பாரதிராஜா, நடிகர் கார்த்தி போன்ற பிரபலங்கள் பலரும் இந்த ஒற்றுமையான கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

எஸ்பிபி அவர்கள் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்து மேலும் பல வெற்றிப் பாடல்களை பாட வேண்டும் என்பதே திரையுலக பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. அனைவரின் வேண்டுதல்களும் உண்மையாகி எஸ்.பி.பி அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என சூரியன் FM சார்பில் மீண்டும் மீண்டும் வேண்டிக் கொள்கிறோம்.

About the author

alex lew