Cinema News Stories

இறைவி-யின் 5 ஆண்டுகள் !!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற இறைவி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, பூஜா தேவாரியா, ராதாரவி, வடிவுக்கரசி மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

மூன்று கதாபாத்திரங்களை மையமாக வைத்து அவர்களை சுற்றி உள்ள பெண்கள் இழக்கும் உரிமைகளையும், சுதந்திரத்தையும் ஒரு மெல்லிசான திரைக்கதையில் ஆழமான ஆணியாக அறைந்திருக்கும் படமே இறைவி. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு பார்ப்போரை பாராட்ட வைக்கும் விதத்தில் அமைந்திருக்கும்.

இப்படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசையில் அமைந்த பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் திரைக்கதை நகர்வுக்கு ஏற்ப பொருந்தி நம்மை ரசிக்க வைத்திருக்கும். குறிப்பாக இப்படத்தில் அமைந்த “காதல் கப்பல்” பாடல் கேட்போரை துள்ளாட்டம் போட வைக்கும் பாடலாக அமைந்தது. அதுமட்டுமின்றி இப்படத்தின் “மனிதி வெளியே வா” பாடல் இன்றும் பல பெண்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது.

பெண்மையைப் போற்றி எடுக்கப்பட்ட இப்படம் அனைத்து விதமான ரசிகர்களாலும் போற்றப்பட்டது என்பதே உண்மை. இப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தை குறித்த டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இப்படம் தனக்கும் தன்னைப் போன்ற பலருக்கும் மிகவும் நெருக்கமான படம் என கார்த்திக் சுப்புராஜ் குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்பதிவுடன் சேர்த்து இறைவி திரைப்படத்தின் கடைசி பக்க திரைக்கதையை பதிவிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜின் டிவிட்டர் பதிவை கீழே காணுங்கள்.

Tags