Specials Stories

ஐயப்பனின் பதினெட்டு படிகள் சொல்லும் பாடம்

The eighteen steps of Lord Ayyappa teach a lesson
The eighteen steps of Lord Ayyappa teach a lesson

பதினெட்டுப் படிகள் ஆன்மிகம், ஆண்டவனையும், கிரகங்களையுமே அடிப்படையாகக் கொண்டு இயங்குவது. வேண்டுவோருக்கு வேண்டும் அருள்புரியும் சபரிமலை ஐயப்பன் குடியிருக்கும் ஆலயத்தில் அமைந்த பொன்னால் பதியப்பட்ட சத்தியம் நிறைந்த பதினெட்டுப் படிகள் ஒவ்வொன்றுக்கும் காரணமும் தத்துவமும் உள்ளது.

முதல் படி காமம்: பற்று உண்டானால் பாசம், கோபம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசம் அடைந்து அழிவு ஏற்படுகிறது.

இரண்டாம் படி குரோதம்: கோபமே குடி கெடுக்கும். கோபம் கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் அழித்துவிடும். பிறகு அதற்கு இடம் கொடுப்பதால் என்ன பயன்?

மூன்றாம் படி லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும். பேராசை பெரு நஷ்டம் ஆண்டவனை அடையவே முடியாது.

நான்காம் படி மோகம்: மதியீனம் ஆண்டவனை அடைய தடையாக நிற்கும் மதில் சுவர். அதை தகர்த்தெறிய வேண்டாமா?

ஐந்தாம் படி மதம்: மதம் கொண்ட யானையின் கதைதான். வெறி பிடித்தவன் கடவுளால் வெறுக்கப்படுவான்.

ஆறாம் படி மாத்ஸரியம்: பொறாமை கொண்டவனுக்கு வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

ஏழாம் படி டம்பம்: தற்புகழ்ச்சி கூடாது. அது அசுர குணம் அல்லவா? அது நமக்கு ஏன்?

எட்டாம் படி அகங்காரம்: அகந்தை கூடாது. பிறப்புக்கே அதுதான் வித்து. பிறந்து பிறந்து இறந்து கொண்டிருக்க வேண்டியதன் முடிவில்லாத சோகச்சுமை.

ஒன்பதாம் படி சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கருமம் செய்தல் வேண்டும். சாத்வீக ஞானம் படைத்தவனுக்கு ஆண்டவன் அருள் எப்பொழுதும் கிட்டும்.

பத்தாம் படி இராஜஸம்: பயனில் இச்சை கொண்டு அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

பதினோராம் படி தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

பன்னிரண்டாம் படி ஞானம்: எல்லாம் ஆண்டவனின் செயல் என்று அறியும் பேரறிவு.

பதிமூன்றாம் படி அஞ்ஞானம்: உண்மை பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

பதினான்காம் படி கண்: ஆண்டவனைக் கண்ணார காணவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

பதினைந்தாம் படி காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு களிப்பெனும் கடலிலே மூழ்க வேண்டும்.

பதினாறாம் படி மூக்கு: ஆண்டவன் சன்னிதியில் இருந்து வரும் நறுமணத்தை நுகர்ந்து புளகாங்கிதம் அடைய வேண்டும்.

பதினேழாம் படி நாக்கு: கடுஞ்சொற்களை உதிர்த்தல் கூடாது. ஆண்டவன் பெருமையையே பேச வேண்டும்.

பதினெட்டாம்படி மெய்: கரங்களால் ஆண்டவனை கூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னிதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் முழுவதும் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனே நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றை பின்பற்றியும் தீயவற்றை களைந்தும் வாழ்க்கை படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்கு கிடைக்கும். இதையே சபரிமலை பதினெட்டு படிகள் நமக்கு உணர்த்துகின்றன.

Article By – Vigithra.k, Salem.

About the author

Sakthi Harinath