தமிழர்களோட வாழ்வியலோடும், இயற்கையோடும் இணைந்த ஒரு சிறப்பான நாள்னா அது சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டு தான்.
உலகத்துல இருக்கக்கூடிய எல்லா தமிழ் மக்களும் கண்டிப்பா இந்த ஒரு நாள சிறப்பாக கொண்டாடுவாங்க. முக்கியமா இந்தியா, இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் நாடுகள்ல உள்ள தமிழர்கள் சித்திரை மாதத்தோடு முதல் நாளான தமிழ் புத்தாண்ட சிறப்பா கொண்டாடுவாங்க. எதனால சித்தரை முதல் நாள தமிழ் புத்தாண்டா நம்ம கொண்டாடுகிறோம் அப்படின்றதுக்கு நான் தெரிஞ்சுக்கிட்ட சில காரணங்களை இந்த இடத்தில் உங்ககிட்ட பகிர்ந்துக்குறேன்.
ராசிகள்ல மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் இந்த மாதிரி 12 ராசிகள் இருக்கு. அந்த காலத்துல நம்மளோட முன்னோர்கள் ஒவ்வொரு ராசியையும் ஒவ்வொரு மாதத்தோட ஒப்பிட்டாங்க. கடைசி ராசியான மீனத்துல இருந்து சூரியன் திரும்பவும் ஒரு சுழற்சி முடிச்சிட்டு மேஷத்துக்கு வர அந்த முதல் நாள தான் சித்திரை 1, தமிழ் புத்தாண்டா கொண்டாடுனாங்க.
இன்னொரு காரணம் என்ன சொல்றாங்கன்னா, சித்திரை மாதத்துல வசந்த காலம் தொடங்கும். இந்த காலத்துல மரங்கள் துளிர்த்து, பூக்கள் பூத்துக் குலுங்கும். வெப்பம் அதிகமாகுறதுனால தாவரங்கள் வளரத் தொடங்கும். தாவரங்களோட வளர்ச்சியோட மனிதர்கள் ஒன்றி இருக்கணும் அப்படின்றத்துக்காக இந்த வசந்த காலம் தொடங்குற சித்திரை 1-அ தமிழ் புத்தாண்டா நம்ப முன்னோர்கள் கொண்டாடுங்கனு சொல்லப்படுது. இந்த மாதிரி நம்ம தமிழ் புத்தாண்ட கொண்டாடுவதற்கு சில காரணங்கள் சில இடங்கள்ல ஒவ்வொரு மாதிரி சொல்லப்படுது. பொதுவா இந்த நாள் அன்னைக்கு தமிழர்கள் இனிப்பு, கசப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்பு, துவர்ப்பு னு அறுசுவைகளையும் உணவுகள்ல எடுத்துப்பாங்க. இதுக்கும் ஒரு காரணம் இருக்குங்க. வாழ்க்கையில இன்பம் மட்டுமே எப்பவும் இருக்காது. கஷ்டம், நஷ்டம், துன்பம் இது எல்லாமே கலந்தது தான் வாழ்க்கை அப்படின்றத நினைவூட்டுவதற்காக தான் இந்த அறுசுவைகளையும் சாப்பிடுவாங்க.
கடந்த காலத்தோட கசப்பு எல்லாத்தையும் மறந்துட்டு புது தொடக்கத்தை ஆனந்தமா தொடங்குங்க, உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Article By – RJ Sandhiya

