‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் தனுஷை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தின் ‘கர்ணன் அழைப்பு : கண்டா வர சொல்லுங்க’ Single track நேற்று (பிப்ரவரி 18) வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது.
கர்ணன் திரைப்படத்தை குறித்த முதல் அறிவிப்பை அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு அவர்கள் வெளியிட்டதிலிருந்தே இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் தயாராகிவிட்டனர். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தனுஷ் மற்றும் சந்தோஷ் நாராயணனின் கூட்டணி இதற்கு முன் ‘கொடி’, ‘வட சென்னை’ ஆகிய படங்களில் இணைந்த போது நமக்கு பல சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்தனர். அது மட்டுமின்றி தனுஷ் நடித்து வெளிவரவிருக்கும் மற்றொரு படமான ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். அப்படத்தின் ‘ரகிட ரகிட’ பாடல் கேட்போரை துள்ளாட்டம் போட வைத்த மெகாஹிட் பாடலாக அமைந்தது.
தற்போது கர்ணன் திரைப்படத்தின் ‘கண்டா வர சொல்லுங்க’ பாடல் வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், 10 லட்சம் பார்வைகளை Youtube-ல் கடந்து Trending பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இப்பாடலுக்கு கர்ணன் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களே வரிகளை எழுதியுள்ளார். “கண்டா வர சொல்லுங்க, கர்ணனை கையோட கூட்டி வாருங்க” போன்ற வரிகளை வைத்து பார்க்கும் போது, இப்பாடல் மகனை தேடும் தாயின் தவிப்பை வெளிப்படுத்தும் பாடலாக அமைந்துள்ளது என தெரிகிறது.
இப்பாடலின் ஆழமான வரிகளுக்கு கிடக்குழி மாரியம்மாளின் குரல் உயிரூட்டும் விதத்தில் அமைந்துள்ளது என்றே சொல்லலாம். Lyric வீடியோவில் கிடக்குழி மாரியம்மாள், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடும் காட்சிகளும், தனுஷின் முகத்தை நெருப்பை கொண்டு தீட்டுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி இயக்குனர் மாரி செல்வராஜூம் Lyric வீடியோவில் சில வினாடிகள் தோன்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பாடல் வெளியானத்திலிருந்து கர்ணன் படக்குழுவினருக்கும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பாராட்டுக்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘கண்டா வர சொல்லுங்க’ பாடலின் Lyric வீடியோவை கீழே காணுங்கள்.