‘நீரின்றி அமையாது உலகு’ என்று நீரின் இன்றியமையாமையை ஒரு வரியில் எழுதி வைத்தார் வள்ளுவர். ஆனால் இன்றைய சூழலோ குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலையிலும், தண்ணீருக்காக உரிமை கொண்டாடி சண்டை போடும் நிலையிலும் உள்ளது. உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் நீர் அவசியம். அது நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று.
நீரின் அவசியத்தை உணர்த்தும் விதமாக 1993ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக உலக மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் முக்கியமான நாட்களில் ஒவ்வொரு வருடமும் ஒரு theme இடம்பெறும். அந்த வகையில் 2022ஆம் ஆண்டின் உலக தண்ணீர் தினத்திற்கான theme ‘Groundwater, making the invisible visible’ என்பதாகும்.
இன்றைய காலகட்டத்தில் நிலத்தடியில் நீர் இல்லாத நிலை அனைத்து இடங்களிலும் உருவாகியுள்ளது. அதனை கண்கூடாகவே பல்வேறு இடங்களிலும் நம்மால் காண முடிகிறது. எனவே நிலத்தடி நீரின் அவசியத்தை, நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த நாளின் நோக்கம். ஏனெனில் நிலத்தடி நீர் இருப்பே செழிப்பான நிலத்தையும், வாழ்க்கையையும் நமக்கு தரும்.
நிலத்தடி நீரினால் உண்டாகும் சில நன்மைகளை தற்போது பார்ப்போம்.
- உலகிலுள்ள பாதி உயிர்களுக்கு நிலத்தடி நீர் தான் குடிநீராக உள்ளது.
- உலகில் பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் நீரில் 40% நிலத்தடி நீர்.
- வீடுகளுக்கு நிலத்தடி நீர் எடுப்பதற்கான Bore போடுவதற்கான செலவு குறையும்.
- உலகிலுள்ள உற்பத்தி நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கு நிலத்தடி நீர் பயன்படுகிறது.
- நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் நீரானது தேங்கும் நிலையில் கொசுக்கள் மூலமாக நோய் பரவுவதற்கும், மனித மற்றும் விலங்கு கழிவுகளால் மாசுபடுவதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால் நிலத்தடி நீரானது இது போன்ற மாசுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டதாக இருக்கும்.
- பாறைகள் மூலமாக இயற்கையாக வடிகட்டப்பட்ட சுத்தமான நீர் நிலத்தடி நீர்.
- சுற்றியுள்ள கிணறுகள், ஏரிகளுக்கு நிலத்தடி நீரானது ஊற்றாக அமையும்.
- சுற்றுச்சூழல் சீர்கேட்டை, உலக வெப்பமயமாதலை தடுக்கும்.
இப்படி மேலும் பல அறிவியல் பூர்வமான நன்மைகள் நிலத்தடி நீரால் நமக்கு கிடைக்கிறது. எனவே உலக தண்ணீர் தினமான இன்று முதல் நிலத்தடி நீரை நம்மால் முடிந்த அளவு சேமிக்க வேண்டும் என்று அனைவரும் உறுதி கொள்வோம்.