“கடிதம் எழுதுவது” என்பது தனி கலை. அன்புள்ள அப்பாவுக்கு, அம்மாவுக்கு, மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, பாசமிகு அண்ணனுக்கு, தங்கைக்கு, உயிர் நண்பனுக்கு, அன்பு காதலிக்கு, காதலனுக்கு போன்ற வார்த்தைகள் கடிதம் தமிழுக்கு கொடுத்தது.
ஒருவருடைய உணர்வுகளை துளிகூட மாறாமல் எழுத்துவடிவில் மற்றருவருக்கு கடத்தி கொண்டு சேர்ப்பது கடிதம். செய்தியை தாங்கி செல்லும் காகிதம் என்பதை விட உணர்வுகளை சுமந்து செல்லும் மையம் என்றே சொல்லலாம். காதல் வளர்த்தது, வாழ்த்துக்கள் பரிமாறியது, வேலை கிடைத்தது, உறவை பலப்படுத்தியது, கோரிக்கை வைப்பது என கடிதங்கள் மனிதகுலத்தின் அனைத்து தேவைகளுக்கும் தகவல் பரிமாற்றமாக இருந்தது.
உணர்வுளை தாண்டி “கடிதம் எழுதுவது” எழுத்து மற்றும் வாசிப்பை பழக்கியது, கற்பனை திறன் அதிகரித்தது, கவிதைகளை உருவாக்கியது என ஒரு மொழியின் மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருந்தது கடிதங்கள். மாபெரும் தலைவர்கள் கூட தங்களது எண்ணங்கள், சிந்தனைகளை கடிதங்கள் மூலமாகவே மக்களுக்கு தெரியப்படுத்தினர்.
யார் வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம் என்றாலும், கடிதம் எழுதவதற்கென்று ஒரு முறை இருந்தது. ஒரு சில ஊர்களில் கடிதம் எழுதுவதற்காகவே ஒருவர் இருப்பார், கடிதம் எழுத தெரியாதவர்கள் எல்லோரும் அவருக்காக காத்திருப்பார்கள். அவருக்கு அந்த ஊரில் தனி மரியாதை கிடைக்கும். அந்த அளவுக்கு கடிதம் மக்களின் வாழ்வில் ஒன்றி இருந்தது.
இப்பொழுது தனிப்பட்ட தொடர்புக்கு ஈமெயிலாகவும், பொது தொடர்புக்கு Blogs, Social Media மீடியா என பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள கடிதம் இன்றும் தன்னுடைய செயல்பாடுகளை சேமமுற செய்து வருகிறது.